“பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
“பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

“பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்:
“மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வருவதற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., மெஜாரிட்டி இல்லாத தேவேந்திர பட்னாவிஸுக்கு இரவோடு இரவாக கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது.
அந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளம்பியது. ஆனால் முதல்வராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோல்வியுற்றார்.
அதன் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.
அந்த ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க பல முயற்சிகளை மேற்கொண்டது. இப்போது, சிவசேனா எம்.எல்.ஏ-க்களை உடைத்து ஆட்சி மாற்றம் செய்வதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்துவருகிறது பா.ஜ.க. சிவசேனா கட்சி எம்.எல்.ஏ-க்கள் மும்பையிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிணையக் கைதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் இந்தக் கட்சிமாறிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். அணி மாறிய எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று பிரிந்து சென்ற அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே கோரியிருக்கிறார்.
சிவசேனா கட்சியினர் வீரமிக்கவர்கள். அதனால் கட்சிமாறிகளை அவர்கள் ஏற்கவில்லை.
மும்பைக்கு வந்தால் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.
இதனால் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமிலிருந்து மும்பைக்கு வர முடியவில்லை.
இந் நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
பா.ஜ.க-வின் தொழில், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதல்ல. குறைவான எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கித்தான் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை கொண்டுவந்திருக்கிறது.
அதே வேலையைத்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் செய்கிறது. அதேசமயம் சிவசேனா தொண்டர்கள் இந்தக் கட்சிமாறிகளை ஓட ஓட விரட்டுவோம் என்று கூறுகிறார்கள்.
இந்த உணர்வு மற்ற மாநிலங்களில் இல்லை. புதுச்சேரியில் கட்சிமாறிகள் ஓடினார்கள். அவர்களில் சிலர் வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள்.
புதுவை மக்களுக்கு அந்த உணர்வு இருக்க வேண்டும். கட்சிமாறிகளை ஒரு காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
இப்படிக் கட்சிமாறிகள் வருவதால்தான் இந்திய நாட்டு அரசியல் தூய்மை இழந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவிடம் எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க என்ன செய்தாலும் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ.க கூறுகிறது.
ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க ரகசியக் கூட்டம் நடக்கிறது.
இதே நிலை இனி வரும் காலங்களில் பா.ஜ.க-வுக்கும் ஏற்படும். பா.ஜ.க-வினர் கட்சி மாறி ஓடும்போது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் அந்த வலி புரியும். கண்டிப்பாக உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவார் என்பது உறுதி” என்றார்.
36 எம்எல்ஏக்கள் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். இவை தவிர சில சுயேச்சை எம் எல் ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
நாங்கள் நினைத்தால் தான் ஆட்சி நிலைக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் வழங்கிவந்த மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் காங்கிரஸ் – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியிருக்கிறார்கள்.
முக்கியமாக காரணம் நாங்கள் தான் உண்மையான சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள்.
பெரும்பான்மையானவர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட தகுதிநீக்க நோட்டீஸ்சுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது.
அனைத்துமே கைமீறிப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது.
இன்னொரு பக்கம் இவர்கள் மீதான நடவடிக்கை என்பதையும் சிவசேனா கட்சி மேற்கொண்டிருக்கிறது. இவை அனைத்துக்குமான கேள்வி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதுதான் தெரியும்.
இந்த வழக்கில் 16 சட்டமன்ற உறுப்பினர்களும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறதா ? ஒருவேளை இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா ? ஆனால் அவ்வாறு நடக்குமா அல்லது சிவசேனா கட்சியும் மகாராஷ்டிரா அரசையும் ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றுவாரா ? அடுத்தடுத்து வரக்கூடியது சுவாரஸ்ய நிகழ்வுகளாக பார்க்க வேண்டியிருக்கிறது.
இதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முழு ஆதரவையும் பாஜகவிற்கு கொடுக்கும் பட்சத்தில் மஹாராஷ்ராவில் பாஜக ஆட்சி அமையும் என பாஜகவினர் குஷியாக, அம்மாநில அரசியல் நகர்வை உற்று நோக்குகின்றனர்.
Comments
Post a Comment