அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு!
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு!
புறப்பட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ்!
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9 மணிக்கு மேல் தொடங்க இருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து, ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் புறப்பட்டார். புறப்படும் முன்னர் வீட்டில் கோமாதா பூஜைகள் நடத்தப்பட்டது
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி, தனது வீட்டில் இருந்து பூரண கும்ப மரியாதையுடன் புறப்பட்டார்.
அவருக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டம் நடைபெறும் வானகரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஜெயக்குமார்
ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான உத்தரவுக்குப் பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம்.
இது அதிமுக-வுக்கு பின்னடைவு கிடையாது. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவெடுக்கும். ஒற்றை தலைமை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
வைத்திலிங்கம்
மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:
நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிபதிகள் எந்த தடையும் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்” என்றார்
சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது. விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கூடுதலாக, பொதுக்குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
அந்த 23 தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார். இதனை எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது.
பல்வேறு பரபரப்புக்கு இடையே இன்று காலை 10 மணி அளவில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து பணிகளும் தற்போது முடிந்து சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் தயார் நிலையில் உள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள அலங்காரங்களில் சிறப்பம்சமாக ஜெயலலிதா படத்துடன் கூடிய பாராளுமன்றம் போன்ற முகப்பு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் என தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2750 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், மண்டபத்தில் மூன்று அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் தீவிர சோதனைக்கு பின்பே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை இல்லாத எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார். அவருக்கு வழி முழுவதும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment