மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம்

மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம்
தூத்துக்குடி:
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டமும் பல மாதங்களாகவே அங்குத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு உதவி பொருட்கள்
இதனிடையே தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உதவி பொருட்கள் அனுப்பி வருகிறது.
இதுவரை இரண்டு கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. மூன்றாவது கட்ட நிவாரண பொருட்கள் வஉசி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘இலங்கையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற தாயுள்ளதோடு தமிழக முதல்வர் சட்டமன்றத்திலே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரூபாய் 123 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளும், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர்களும் அனுப்பப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார்.
முதற்கட்டமாகச் சென்னையில் இருந்தும், இரண்டாம் கட்டமாகத் தூத்துக்குடியில் இருந்தும் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.
மூன்றாவது கட்டமாக நிவாரண பொருட்கள் வஉசி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
கூடுதலாக உதவி பொருட்கள்
இப்போது ரூ. 174 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது.
முதல்வர் அறிவித்ததைக் காட்டிலும் கூடுதலாகவே உதவித்தொகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் பின்னரும் நிவாரண பொருட்கள் வழங்கத் தமிழக அரசை இலங்கை கேட்டுக்கொண்டால், அதைப் பரிசீலனை செய்து நிவாரணப் பொருட்களை வழங்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்து நாங்கள் யாரையும் இங்குக் கூப்பிடவில்லை. வந்தவர்களை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றி வருகின்றோம்.
கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததே வஃக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு ஒரே காரணம்!’ என்றார்.
தொடர்ந்து மின் கட்டண விவகாரத்தில் பாஜக, அதிமுக நடத்தும் போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘இவர்கள் போராடுவது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் உள்ளது. மின் கட்டண உயர்வுக்குக் காரணம் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் முழு காரணம்’ என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment