Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
செஸ் ஒலிம்பியாட்
Chess Olympiad 2022:
இதுபோன்று பன்னாட்டு போட்டிகளை நடத்த குறைந்தது 18 மாதங்களாவது ஆகும். ஆனால் நான் பெருமையுடன் கூறுகிறேன் 4 மாதங்களே ஆனது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது இந்தியாவுக்கு கவுரவம் என்றும் இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பெரிய அளவில் எழுச்சியுடன் இன்று இந்த விழா நடைப்பெற்று இருக்கிறது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது ரஷ்யா நாட்டில் நடப்பதாக இருந்தது கொரொனா பாதிப்பால் அங்கு நடத்த முடியவில்லை.
அதனால் எந்த நாட்டில் நடத்த வேண்டும் என ஆலோசனை நடந்தது
.அப்போது தமிழகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனதுறை சார்ந்த அமைச்சரிடம் அறிவுறுத்தினேன்.
இந்த போட்டியை நடத்த 18 துணை குழுக்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. இதுபோன்று பன்னாட்டு போட்டிகளை நடத்த குறைந்தது 18 மாதங்களாவது ஆகும். ஆனால் நான் பெருமையுடன் கூறுகிறேன் 4 மாதங்களே ஆனது.
பிரதமருக்கு தொல்காப்பியம் புத்தகம் பரிசளிப்பு
இந்த பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உடன் இருந்த அரசு அதிகாரிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல இயலாத ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார்.
என்னை நலம் விசாரித்த அவர்களிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன்.
அவர் பெருந்தன்மையோடு சொன்னார் ‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் – நான் நிச்சயம் கலந்து கொள்வேன் – இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா’ என்று பிரதமர் குறிப்பிட்டார்.
44-ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்று துவங்கியுள்ளது.
இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை மட்டுமல்ல – சுற்றுலாத் துறையும் – தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இன்னும் சொன்னால், தமிழ்நாட்டினுடைய மதிப்பும், தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயர்கிறது.
இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது அல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அதனுடைய விளைவே இந்த உயர்வு.
இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.
தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப் பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது.
சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள்.
மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது.
கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது.
கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.
போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு.
கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு.
அரசனும் உண்டு, அரசியும் உண்டு.
போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. ‘ஆனைக்குப்பு’ என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. ‘ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே’ என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது. அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது.
அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது.
ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது. அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு!
இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த ஒலிம்பியாட் ஒரு சிறப்பான துவக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்” என பேசினார்.
Comments
Post a Comment