4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை!

4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை!
தெலுங்கானாவில் ராகுல் காந்தி இன்று நடைப்பயணம்
ஹைதராபாத்:
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி நடைப்பயணத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்லும் இந்த ‘தேச ஒற்றுமை யாத்திரை’ நேற்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது.
50 வது நாளான நேற்று தெலுங்கானாவின் மஹபூப் நகரிலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பயணத்திற்கு கட்சியினர் அமோக வரவேற்பளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகினர். அவர்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லையென்றும், ராகுல் காந்தி மீதும் கடும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் கட்சி பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் அதன் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் விலகியது பரபரப்பாக பேசப்பட்டது.
எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை அவர் தொடங்கினார்.
செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது 50 வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 4 மாநிலங்கள் 18 மாவட்டங்கள் என 1,230 கி.மீ வரை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த 23 ம் தேதி தெலுங்கானாவின் மஹபூப் நகர் குடிபெல்லாவை வந்தடைந்தார்.
தீபாவளி மற்றும் கட்சியின் புதிய தலைவராக மல்லிகர்ஜூன கார்கே பதவியேற்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் நேற்று தெலுங்கானாவின் மஹபூப் நகரிலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி
காலை 6.30 மணிக்கு பயணத்தை தொடங்கிய அவர் சுமார் 27 கி.மீ தூரம் சென்ற பின்னர் மக்தலில் உள்ள ஸ்ரீ பாலாஜி தொழிற்சாலையில் யாத்திரையை முடிக்கிறார்.
இதனையடுத்து வரும் நவம்பர் 1ம் தேதி ஹைதராபாத் சென்றடையும் அவர், சார்மினாரில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
முன்னதாக குட்டெபல்லூர் பகுதியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கு எதிராக இந்த யாத்திரை நடைபெறுகிறது.
தற்போது பணக்காரர்களுக்கான இந்தியா ஒருபுறமும், ஏழை சாமானிய இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுக்குறு வணிகர்களுக்கு ஒரு இந்தியா என இருக்கிறது.
நமக்கு இரண்டு இந்தியா வேண்டாம். ஒரே இந்தியாதான் வேண்டும். அந்த இந்தியாவில் அனைவருக்கும் நீதி, வேலைவாய்ப்பு மற்றும் சகோதரத்துவம் இருக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment