கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

கோயம்புத்தூரில் நடைபெற்ற கார்
சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் விவகாரத்தில் இன்று போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகரில், நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பித்தார்.
மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில் 58 காவல் அலுவலர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும் 14 காவல் அலுவலர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந் நிகழ்வில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து உள்ளீர்கள்.சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இருக்கிறீர்கள். துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு போலீசாரை பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். கோயம்புத்தூரில் கார் வெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
போலீஸ் இதில் துரிதமாக செயல்படவில்லை. என்ஐஏ இதை உடனே விசாரிக்க வேண்டும். நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் திறமையுடன் செயல்பட்ட போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில்:
திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்ததாக புகார் கூறுகிறார்.
இது அபத்தமானது. இது பொய்யான பழி.ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும்.
இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். அது உண்மை கிடையாது, என்று குறிப்பிட்டு உள்ளார்.
Comments
Post a Comment