திருவண்ணாமலை: தகுதியானவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் அமைச்சா் எ.வ.வேலு
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, மெய்யூா், நாச்சானந்தல், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூா் ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.
சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து புதிய மின் இணைப்பு, இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, ஏரி தூா்வாருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
“நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய சாலைகள் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு மனுக்களைக் கொடுத்துள்ளீா்கள். இந்த மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் “என்றாா்.
நலத் திட்ட உதவிகள் வழங்கல்:
இந் நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வருவாய்த்துறை, முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகளை
அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
உடன் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யா தேவி, மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன்,உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment