Skip to main content

பொங்கல் பண்டிகை: உலகம் முழுவதும் கொண்டாட்டம் தமிழர்கள் உற்சாகம்

பொங்கல் பண்டிகை: உலகம் முழுவதும் கொண்டாட்டம் தமிழர்கள் உற்சாகம்

சென்னை:

உழவர் திருநாளாம் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, புத்தாடைகள், பொங்கலிட தேவையான பொருட்கள் வாங்க குவிந்ததால் பஜார்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை விழா, போகியுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும்.

அதன்படி நேற்று காலை போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் காப்பு கட்டி விளக்கேற்றி மக்கள் வழிபட்டனர்.

பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புதுநெல் வந்திருக்கும். ஆதலால் அதை குத்தி அதில் தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.

எனவே, நாம் பல்வேறு விழாக்கள், பண்டிகைகளை கொண்டாடினாலும், தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக விளங்குவது தைப் பொங்கல் பண்டிகை தான். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் உழவர் திருவிழாவாக இதனை கொண்டாடுகின்றனர்.

விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் கதிரவன், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகள், உழவுப் பொருட்களை இந்த நாளில் தெய்வமாக கருதி வணங்கி வழிபாடு நடத்துகின்றனர் விவசாயிகள். எனவே, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை இன்று காலை உலக தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் நிலவியது.

இந்தாண்டு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முதல் வரும் 17ம்தேதி என 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதாவது, நேற்று போகி, இன்று தைப்பொங்கல், 16 ம்தேதி மாட்டு பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என 4 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் கடந்த 12 ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல தொடங்கினர்.

இதனால், ரயில் நிலையம், பேருந்து நிலையம் விமான நிலையம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் 5 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகள் மூலம் ஒரு லட்சம் பேரும், ரயில்கள் மூலம் இரண்டரை லட்சம் பேரும், சொந்த வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலம் ஒன்றரை லட்சம் என மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புதுத் துணிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.

இதனால் சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் பூக்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருந்தது.

தைத் திருநாளான பொங்கல் மற்றும் அதன் முன்னரும் பின்னரும் வரும் மங்கலகரமான நாட்களில், பூஜைக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூக்கள் அதிகம் தேவைப்படுகிறது.

அதிலும் மார்கழி மாதம் முழுவதும் பூக்களுக்கு இருக்கும் தேவை, தையில் இரட்டிப்பாகிறது. இந்நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதேபோன்று பொங்கலிடுவதற்கான அனைத்து விதமான பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பஜார்களில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் நேற்று முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.

ஒவ்வொறு பகுதிகளிலும் உள்ள சிறிய முதல் பெரிய மார்கெட் வரை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற தொடங்கியுள்ளது.

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும் பொங்கல் என்று மக்கள் விமர்சையாக கொண்டாடுவர்.

இதை கொண்டாட பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது. 

இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் மக்கள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர்.

ஒரு லட்சம் பேர் கூடுவார்கள்

சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...