பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
அதிமுகவின் தேர்தல் விதிமீறல் புகார் பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு : மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி தேர்தல் அலுவலரிடம் அதிமுக புகார் மனு அளித்தது.
இந்நிலையில், தான் பேசியது தேர்தல் நடத்தை விதி மீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் தீவிர பிரச்சாரம்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி சிலை, அக்ரஹாரம், சம்பத் நகர், முனிசிபல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் இருந்தபடி பேசி வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், நடந்து சென்றும் ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
"நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சித் தலைவரோ, மக்களோ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்.
நிதி நிலைமையை முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம்.
ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று கூறி, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய முதலமைச்சரே இதுபோன்று செயல்படுவது தவறானது என்றும் இன்பதுரை தெரிவித்தார்
இந்நிலையில், வேறு பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் என்றும் பேசினார்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம், மீதமுள்ள 15% வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றி முடிப்போம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment