வந்தவாசி: நீட் தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 4 ஆம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா!
ஓராண்டு விடுதி கட்டணத்தை மூத்த மருத்துவர் பஷீர் அஹமது ஏற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் ரோஜா அரசுப் பள்ளியில் பயின்று நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக அரசின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். அவருக்கான பாராட்டு விழா வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கல்வி மையம் முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் கே.பஷீர் அகமது பங்கேற்று, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அரசு ஒதுக்கீட்டில் நான்காம் இடம் பிடித்த மாணவி ரோஜாவை பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
மேலும் அவரின் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு விடுதி கட்டணம் அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.
மேலும் நல்ல முறையில் படித்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
எக்ஸ்னோரா இயக்குநர் மு.பிரபாகரன், பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ், பூங்குயில் சிவகுமார், கலாம் பவுண்டேஷன் நிர்வாகி சீ.கேசவ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment