நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை!
நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை!
நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறிதாக்குதலாகும். பாதிக்கப்பட்ட செய்தியாளர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும், அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்
திருப்பூர்: நியூஸ் 7 செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப் பிரபு, வழக்கம் போல செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். நேற்றிரவு அவரது வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேசபிரபு வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் பிரவீன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment