ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; 8 மணிநேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கைதாவதை முன்னிட்டு ஜார்க்கண்ட மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
ஆளுநர் ராதாகிருஷ்ணனும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அடுத்த முதல்வராகப் பதவியேற்ற இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்ப பட்டன.
தொடர்ந்து, ஜனவரி 30 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்டது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
ஒரு வேளை ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை ஆளுங்கட்சி வட்டாரங்கள் மறுத்து வந்தன.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நெருக்கடியை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் இன்று ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதம் அளித்த உடனேயே, அமலாக்கத்துறை அவரை தனது காவலில் எடுத்தது.
இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சம்பாய் சோரன், முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
Comments
Post a Comment