ராகுல் காந்தியின் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்: காங். - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு பதட்டநிலை!
குவஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பியின் நடைப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் வரை (கிழக்கில் இருந்து மேற்கு) இரண்டாம் கட்ட பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா்.
தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நடைப்பயணத்தின் போது அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மாவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், பாஜக தொண்டர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குவஹாட்டியில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நடைப்பயணத்துக்கான அனுமதியை அஸ்ஸாம் அரசு மறுத்திருந்தது.
இந்த தடையை மீறி ராகுல் காந்தியை வரவேற்க குவஹாட்டி எல்லையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தனர்.
குவஹாட்டி எல்லையை ராகுல் காந்தி அடைந்ததும், மேலதாளத்துடன் அவரை வரவேற்ற கட்சித் தொண்டர்கள் போலீஸார் அமைத்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயற்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் கண்முன்பே காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஏற்கெனவே அஸ்ஸாம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment