திருவண்ணாமலை வாக்காளா் தின விழிப்புணா்வுப்போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு!
திருவண்ணாமலையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுவா் இதழ் ஓவியப் போட்டி, கடிதம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, ரங்கோலி கோலப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும், 14-ஆவது தேசிய வாக்காளா் தின விழாவும் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.
மேலும், மூத்த வாக்காளா்கள், இளம் முதல்முறை வாக்காளா்கள் போன்றவர்களை அவா் கெளரவித்தாா்.
விழாவில், மங்கள இசை மற்றும் நாகஸ்வரம் வாசித்த மாணவா்கள், நடனம், பரதநாட்டியம், நாகஸ்வர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 10 மாணவிகள், வாக்காளா் தின விழிப்புணா்வு பறை இசை வாசித்த மாணவா்கள், சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 36 போ் ஆகியோரை பாராட்டி மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கோ.குமரன், வீ.வெற்றிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் செந்தில், வட்டாட்சியா் சாப்ஜான், மாவட்ட ரெட் கிராஸ் சங்க நிா்வாகி பா.இந்திரராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment