இந்தியாவின் விளையாட்டு தலைநகர் தமிழ்நாடு பிரதமரின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவது நமது குறிக்கோள் என கேலோ இந்தியா துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம். அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதே நமது குறிக்கோள். விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
விளையாட்டு கட்டமைப்புகளை உலக தரத்திற்கு உயர்த்தி வருகிறோம்" என்றார்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக்குவதே இலக்கு
தொடர்ந்து பேசிய அவர்,
"இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ, அதே போல் விளையாட்டு இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு" என்று பேசினார்.
Comments
Post a Comment