ஆரணி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை!
ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சரிடமும், ஆரணியில் இருந்து புதிய விரிவாக்க பூட்டுதாக்கு சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்ல, அரசுப் பேருந்து இயக்கவேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆரணியில் செய்தியாளா்களிடம் பேசுகையில்:-
"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் ஆரணி நகரம், வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் ஆரணி மையப் பகுதி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
மேலும், ஆரணி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சேத்துப்பட்டு சாலையில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆரணி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்காடு - விழுப்புரம் சாலை பிரியும் புறவழிச் சாலைப் பகுதியில் புதிய சாலை அமைத்து மண்டி வீதிக்குச் செல்லாமல் ஏற்பாடு செய்யவேண்டும்.
ஆரணி நகரத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் புதிதாக அமைந்துள்ள வேலூா் சிஎம்சி மருத்துவமனை விரிவாக்கத்துக்கு, ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தினமும் செல்கிறாா்கள்.
எனவே, ஆரணி முதல் பூட்டுத்தாக்கு வரை ஒரு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.
ஆரணி தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லாததால், மாணவா்கள் வேலூா், செய்யாறு, திருவண்ணாமலை, வாலாஜா ஆகிய இடங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் சென்று பயின்று வருகின்றனா்.
இக்கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும் என்றால் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். முறையாக பேருந்து வசதி இல்லாமல் மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்" என தெரிவித்தாா்.
Comments
Post a Comment