வங்கதேசத்தில் வன்முறைக்குக் காரணமான 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இடையில் சில காலம் ரத்து செய்யப் பட்டிருந்த இந்த இட ஒதுக்கீடு மீண்டும் அமலுக்கு வருவது குறித்து சமீபத்தில் வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை வங்கதேச அரசு களமிறக்கியுள்ளது.
நாடு முழுவதும் நடந்த வன்முறையில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கக் கூடாது என்றும் வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச பிரதமர் அலுவலகம் மற்றும் காவல்துறையின் இணையதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஜூலை 19ம் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் வங்கதேசத்தில் வன்முறைக்குக் காரணமான இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைக்குமாறு உச்ச நீதிமன்றம் வங்கதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment