காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்
கார்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண வந்த பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
இவா்கள் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா்.
மாலை 4.17 மணிக்கு பௌா்ணமி தொடங்கியதும் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் நலன் கருதி தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகுவிமரிசையாக நேற்று முன் தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் 8 வது மாதமாக வரும் கார்த்திகை வந்துவிட்டாலே நம் அனைவருக்கும் இல்லங்களில் ஒளிரும் தீபங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த தீபத்துக்கு பின்னணியில் வரலாற்று காரணம் சொல்லப்பட்டாலும் நம் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை தத்துவமாக உள்ளது.
இத்தகைய கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும்.
10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் கோயிலின் பின்புறம் உள்ள 2664 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவண்ணாமலை தீபத்
திருவிழாவுக்காக நகரப் பகுதியில் உள்ள 153 பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்படும் டிசம்பர் 13-ம் தேதியான நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கிட்டத்தட்ட 50 லட்சம் பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தந்து சுவாமிகளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் சமீபத்திய புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் தீபமலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு வெகு விமரிசையாக மகாதீபம் ஏற்றப்பட்டது.
மாலை சரியாக 6.01க்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் நேரிலும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தரிசனத்தை கண்டு கழித்தனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்பு தான் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றும் வழிமுறை தொடர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகாதீபத்துக்கான முன்கட்ட பணிகள் அனைத்து நடைபெற்றது.
களைகட்டிய திருவண்ணாமலை
மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கோயில் ஊழியர்கள் தீப மலைக்கு கொண்டு சென்றனர். சுமார் 350 கிலோ எடை கொண்ட இந்த கொப்பரையானது ஆறடி உயரம் கொண்டது. மேலும் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கொப்பரையில் காடா துணி நெய்யில் ஊற வைக்கப்பட்டு மகாதீபமானது ஏற்றப்பட்டது. நடப்பாண்டு மலை உச்சியில் மகா தீபத்தை காண 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் நேற்று காலை கோயிலில் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை காண 7,500 பேருக்கும் மாலையில் ஏற்படும் மகா தீபத்தை காண 11,500 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் நேற்று திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திரும்பும் திசை எங்கும் மக்கள் வெள்ளம்
14 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செயல்பட்டனர்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம்..
சுமார் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு ஆயிரம் மீட்டர் காடா துணியாலான திரியில் ஏற்றப்படும் மகா தீபமானது கிட்டத்தட்ட 11 நாட்கள் எரியும். 30 கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பவர்களும் எளிதில் இந்த மகா தீபத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த தீபத்திற்கு பயன்படுத்தப்படும் நெய் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியது ஆகும். மேலும் கொப்பரையானது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளால் செய்யப்பட்டிருக்கும். கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வீடுகளிலும் தீபமேற்றி வழிபாடு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment