Skip to main content

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு அரசியல் கட்சிகள்  கண்டனம்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது, 'இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்' எனக் கூறினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு அரசியல் களம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந் நிலையில், அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.' என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.

அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,

'அம்பேத்கர்! அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது 'பேஷன்' ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்' என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்.

உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

'அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்' என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.

'எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?" என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனும் தனது எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

அரசமைப்புச் சட்டமும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.

சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.

புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!" எனத் தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பா.ஜ.கவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.

இந்தியா முழுவதும் போற்றப்படக் கூடிய மாபெரும் தலைவர் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக் கூடிய செயலை செய்யக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய திருநாட்டில் யாராக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நகர்வுகள் நடப்பதில்லை என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும், பாபாசாகேப் அவர்களைப் பற்றி மாநிலங்களவையில் அமித்ஷா பேசியவை சங் பரிவார் கூட்டத்தின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அம்பேத்கர் அவர்களை இகழ்வதால் அவருடைய புகழ் மறைய போவதில்லை. அமித்ஷா மட்டுமல்ல, யார் வந்தாலும் அவரது புகழை அழிக்கவோ தவிர்க்கவோ இயலாது. இன்றும் என்றும் என்றென்றும் தேவையாக இருக்கிறது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியல்.

அமித்ஷா சார்ந்திருக்கும் சங் பரிவார கூட்டத்திற்கு பாபாசாகேப் இயற்றிய இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. அம்பேத்கர் அவர்களின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதின் வெளிப்பாடு தான் அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சு. அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார் .

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அம்பேத்கரின் பெயரை சொல்லுவது பேஷன் ஆகிவிட்டது என்கிறார் அமித்ஷா

உங்களுக்கு இவ்வளவு எரிச்சலை கொடுக்கும் அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...