டெல்லியில் திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏபிவிபி! மாணவர்கள் கைது!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனின் ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் விளங்குகிறது. பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகம் சென்னை கிண்டியில் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவிக்கு 19 வயது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் அவருக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மறைவான இடத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் காதலனை பலமாக தாக்கியதோடு அந்த இளம் பெண்ணை மிரட்டி உடைகளை களைந்து வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த பெண் காதலன் மூலம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அதில், ஞானசேகரன் தான் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை எடுத்து ஞானசேகரனை கைது செய்த போலீசார் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் ஆளுநரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரம் இந்திய அளவிலும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் 'நிர்பாயா' என்ற அடைமொழி கொண்ட மாணவி பாலியல் வன்கொடுமையை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம் தொடர்பாக ஏபிவிபி மற்றும் பல அரசு கல்லூரிகளில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் டெல்லி வரை இந்த போராட்டம் பரவி இருக்கிறது.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தற்போது போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் திரண்டு தமிழக அரசை கண்டித்தும் குற்றவாளியை காப்பாற்ற முயல்வதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் "டவுன் டவுன்" என்ற முழக்கத்தோடும் பதாகைகளோடும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
Comments
Post a Comment