தெருவோர வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் மொபைல் நம்பர், ஆதார் போதும்.. குறைந்த வட்டியில்!
பட்ஜெட் 2025 இல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ப்ரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வெண்டார் ஆத்மாநிர்பர் நிதி (Prime Minister Street Vendors Atmanirbhar Nidhi - PM SVANidhi Scheme) திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
இந்திய பிரதமரின் ஆத்மாநிர்பர் நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் இந்த கிரெடிட் கார்டுகளின் லிமிட் என்ன? இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும்? உண்மையிலேயே இதற்கு செக்யூரிட்டி தேவை இல்லையா? யார் கடன் கொடுப்பார்கள்? விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? இந்த திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
இதோ விவரங்கள்:
இந்த கிரெடிட் கார்டுகளின் வரம்பு ரூ. 30,000 ஆக இருக்கும், அதாவது இது தெருவோர விற்பனையாளர்கள் தங்கள் வணிகங்களுக்கு ரூ.30,000 வரை கடன் பெற அனுமதிக்கும் என்றும், இந்த கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் இந்த திட்டம், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது (ஜூலை 2020) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களால் தொடங்கப்பட்டது.
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக நஷ்டத்தை சந்தித்த தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சாலையோரங்களில் வண்டிகள் அல்லது கடைகளை நடத்துபவர்கள், பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்பவர்களுக்கு, சலவைக்கடை மற்றும் சலூன்களை வைத்து இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களைப் பெறலாம். சரியான நேரத்தில் கடனைத் திருப்பி செலுத்துவதன் மூலம் கூடுதல் நன்மைகளையும் பெறலாம்.
பிஎம் ஸ்ட்ரீட் வெண்டார் ஆத்மாநிர்பர் நிதி திட்டத்தின் கீழ், விற்பனையாளர்கள் பின்வரும் கட்டங்களில் ரூ.50,000 வரை கடன்களைப் பெறலாம்:
முதல் தவணை - 12 மாதங்களுக்கு ரூ.10,000 ரூபாய் வரை.
இரண்டாவது தவணை - 18 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ 15,000 மற்றும் அதிகபட்சம் ரூ 20,000 வரை.
மூன்றாவது தவணை - 36 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ 30,000 மற்றும் அதிகபட்சம் ரூ 50,000 வரை.
இந்த கடனைபெறுவதற்கு பிணை அல்லது செக்யூரிட்டி தேவையில்லை. திருப்பி செலுத்துதல் மாதாந்திர தவணைகளில் இருக்கும். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7% வட்டி மானியத்தை வழங்குகிறது, இது காலாண்டு அடிப்படையில் பயனாளியின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். வாங்கிய கடனை சரியான தேதிக்கு முன் திருப்பி செலுத்தினால், முழு மானியமும் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்படும். கூடுதலாக, டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் விற்பனையாளர்கள் ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக்கையும் பெறுவார்கள்.
மேலும் கடனை சரியான நேரத்தில் மற்றும் முன்கூட்டியே திருப்பி செலுத்துபவர்கள் எதிர்காலத்தில் அதிக கடன் தொகையை பெறுவதற்கான தகுதியை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இத்திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரராக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்திற்கான தேவையான கேஒய்சி ஆவணங்களில் - ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் ஐடி உள்ளது. இதுதவிர்த்து - ஓட்டுநர் உரிமம், MGNREGA அட்டை அல்லது பான் அட்டையையும் சமர்ப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புபவர்கள், நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதை செய்ய முதலில், விற்பனையாளரின் மொபைல் எண் ஆனது ஆதார் உடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன pmsvanidhi.mohua.org.in அல்லது மொபைல் ஆப் மூலம் சமர்ப்பிக்கலாம்.
Comments
Post a Comment