இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு அதிரடி உத்தரவு..!!
நாட்டில் அதிகளவு விபத்துக்கள் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது என பலரும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினரும் இதை கட்டுப்படுத்த அபராதம், லைசென்ஸ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லையென்றால், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், போலீசார் கும்பலாக நின்று சோதனையில் ஈடுபடும்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசலும், ஏற்ப்பட்டு, பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இனி வாகன சோதனையில் ஈடுபடும்போது, போக்குவரத்து போலீசார் கும்பலாக நிற்கக் கூடாது என்றும் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு போலீஸ்காரர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை காவலர் மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment