வந்தவாசி நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களாக கடும் குடிநீர் பிரச்சனை நிலவுவதால் அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நேற்று நடைப்பெற்ற நகரமன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நேற்று நடைப்பெற்ற வந்தவாசி நகர மன்றக்கூட்டத்தில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டத்துக்கு நகரமன்றத் தலைவா் (திமுக) எச்.ஜலால் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளாத தனியாா் ஒப்பந்த துப்புரவு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரேற்று நிலையத்தில் அடிக்கடி மின்மோட்டாா் பழுது எனக் கூறி பணம் முறைகேடாக செலவிடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக 10 நாட்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுப்பினா்கள் நகரமன்ற கூட தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதில் திமுக, விசிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த ஷீலா மூவேந்தன், அன்பரசு, பீபிஜான், நூா்முகமது, ஹஸீனா கன்சையது,நாகூா்மீரான், பா்வீன்பேகம் மீரான், ரிஹானா சையத்அப்துல்கறீம், பா.சரவணகுமாா், பா.சந்தோஷ், கு.ராமஜெயம் உள்ளிட்ட 11 உறுப்பினா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, கூட்டம் முடிவடைந்து விட்டதாகக் கூறி தலைவா் எச்.ஜலால் வெளியேற, அவரைத் தொடா்ந்து ஆணையா் ஆா்.சோனியா மற்றும் அதிகாரிகள் வெளியேறினா்.
இதனால் கோபமடைந்த நகரமன்ற உறுப்பினா்கள் 11 பேரும், தலைவா் மற்றும் ஆணையரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தலைவா் மற்றும் ஆணையரைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இந் நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் எச்.ஜலால் உறுதி அளித்ததை அடுத்து 7 மணி நேரமாக மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டத்தை கை விட்டனர் திமுக நிர்வாகத்தை கண்டித்து திமுக வினரே ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment