தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை!
தமிழ்நாடு எம்.பி.க்களின் அமளியால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளி செய்தனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இது தொடர்பாக விவாதிக்க திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தார். ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து இரண்டு அவைகளிலும் பங்கேற்றனர்.
"நியாயமான மறுசீரமைப்பு.. தமிழகம் போராடும்.. தமிழகம் வெல்லும்" ஆகிய வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து வந்ததால் வெளியேற செல்லுமாறு தமிழக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவை விதிகளை மீறி தமிழக எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஆனால், வெளியேற மறுத்து தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளி செய்தனர். இதனால் அவை மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவையின் மாண்பை தமிழக எம்.பி.க்கள் குறைத்துவிட்டதாக புகார் கூறிய பாஜக உறுப்பினர்கள், தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் உடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.
இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் திமுக எம்.பி.க்கள் போராட அதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர் திமுக கூட்டணி கட்சிகளின் அவை தலைவர்களை தன்னை நேரில் வந்து சந்திக்க வருமாறு உத்தரவை பிறப்பித்து அவையை ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment