இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ம் தேதி தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி டூரிஸ்ட்கள் 26 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கடந்த 4 நாட்களாக எல்லையில் அத்துமீறி போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியப் படை விரட்டியடித்து வருகிறது. தொடர்ந்து போர் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அமைச்சரவை இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், "எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்" என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,
"எங்களது படைகளை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். ஏனெனில் அது இப்போதைக்கு விரைவான நடவடிக்கையாக உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அதன்காரணமாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களுடைய தாக்குதல் உடனடியாக நிகழும். ஆகையால், பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. எங்களது நாட்டுக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே, நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்"
எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது.
இதையடுத்து, மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் கடந்த (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், 'பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினர் அவ்வப்போது எல்லைக்கோட்டு பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம், அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்திய கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment