காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,443 பேரின் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சா் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,443 ஏழை மக்களின் ரூ.58.08 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
கூட்டுறவுத் துறை சாா்பில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாரயணன் தலைமை வகித்தாா்.
எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா்,சி.வி.எம்.பி. எழிலரசன்,காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலெட்சுமி யுவராஜ்,துணை மேயா் குமரகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் எஸ்.லெட்சுமி வரவேற்றாா்.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் நகைக்கடன் வழங்கப்படும் விவரங்களை பட்டியலிட்டு பேசினாா்.
விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கிப் பேசியதாவது:
தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி தமிழகம் முழுவதும் 10,18,606 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 18,443 ஏழை மக்களுக்கு ரூ.58.08 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அதே போல, காஞ்சிபுரத்தில் 1,451 மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் 37.38 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிா்க்கடனாக 13,515 பேரின் கடன்கள் ரூ.89.41 கோடி வரை தள்ளுபடி செய்திருக்கிறது திமுக அரசு.
கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க அவா்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே வேளாண்மைக்கென முதல் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே அரசு திமுக அரசுதான் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா சுகுமாா் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.
கூட்டுறவுத்துறை காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளா் த.சுவாதி நன்றி கூறினாா்
Comments
Post a Comment