``ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?" - பாஜக தலைவர் அண்ணாமலை
``இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பர்யமிக்க ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?'' - அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள
அறிக்கையில்:`
இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், நம் தமிழ்நாட்டிலும் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில், அரசு அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன், ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன், இசை வாத்தியங்கள் முழங்க நடைபெறுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கியமான அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அக்டோபர் 2-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ள ஊர்வலம் நடத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பர்யமிக்க ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?
தமிழகத்தில் மாற்றுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினரும், தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்ல உரிமை மறுக்கப்படுகிறதா? உங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர்களை ஒதுக்குவதற்கு ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவீர்களா? சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலங்களை நடத்துவதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை பொதுக் கூட்டத்தையும் ஊர்வலத்தையும் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமே தவிர, அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதன் தீர்ப்பை அவமதித்து, தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊர்வலம் நடத்த விண்ணப்பித்திருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் காவல்துறையினர், `மத்திய அரசு, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்துள்ளதால், பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர் வெடிகுண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக, மாநிலம் முழுவதும் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தினால், அதில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பேரணிக்குத் தடைவிதிக்கப்படுகிறது' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கடிதம் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அக்கடிதத்தின் தகவல் உண்மையெனில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், வன்முறை நடத்தும் அளவிற்கு தமிழகத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா? அப்படி என்றால் காவல்துறை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இருப்பதை ஒப்புக்கொள்கிறதா? அல்லது, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? மாநிலம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காட்டுகிறதா?
இந்தியா முழுவதும் ஒழுங்குடன், அமைதியுடன், கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன், ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் எப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று தமிழக காவல்துறை நினைப்பது ஏன்? தங்களால் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக அரசும் காவல்துறையும் அச்சப்படுகின்றனவா? ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஊர்வலம் நடத்த காவல்துறையின், முறையான அனுமதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.
Comments
Post a Comment