Skip to main content

சுப்ரீம் கோர்ட்டின் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார்


அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டிருப்பதை இரட்டை வெற்றியாகவே அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் கட்சிகள் டெல்லி அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து டெல்லி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது.

இருப்பினும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

அதற்கான பணிகளை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி: ஓ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆட்களை இழுக்க வியூகம்

அ.தி.மு.க.வில் விடுபட்டு உள்ள பதவிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து அந்த பதவிகளை கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள் மூலமாக அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தீர்ப்பு அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து அங்கு உரிய அங்கீகாரத்தை பெற்றிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி உள்ளார்.

இந்த பணிகள் முடிவடைந்தால் மட்டுமே கட்சி தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அர்த்தம் என்றும் எனவே அப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் எனவும் அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து அது தொடர்பான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் விடுபட்டு உள்ள பதவிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து அந்த பதவிகளை கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இது தொடர்பான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் பற்றியும் அதில் என்னென்ன திட்டங்கள் தி.மு.க. அரசு செயல்படுத்தாமல் உள்ளது என்பது பற்றியும் மக்கள் மத்தியில் விரிவாக எடுத்துக் கூறவும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். இதற்காக அ.தி.மு.க. ஐ.டி. அணியை மேலும் பலப்படுத்தி அதன் மூலமாக இதுபோன்ற பிரசாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இளைஞர்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களை பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தவும், கணினி அறிவு மிகுந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஐ.டி. அணியில் அதிகம் சேர்க்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தலைமை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கட்சியின் நலனுக்காக அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் முழு மூச்சுடன் பணியாற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தனது அதிரடி நடவடிக்கைகள் மூலமாக அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தரப்பில் அதிருப்தியில் இருக்கும் நபர்களை தங்கள் பக்கம் இழுத்து அவர்களுடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமைக்கான போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் கடும் பின்னடைவை சந்தித்து இருப்பதால் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் பலர் தங்களுக்கு இனி எதிர்காலம் இருக்குமா? என்கிற சந்தேக கேள்வியுடனேயே இருந்து வருகிறார்கள்.

இப்படி ஊசலாட்ட மனநிலையில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியில் இருந்து ஒதுங்கி நிற்கும் நபர்கள் ஆகியோரையும் அடையாளம் கண்டு மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் சேர்க்கவும் அ.தி.மு.க. தனித்து வியூகம் அமைத்து செயல்பட தொடங்கி உள்ளது.

இப்படி கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறுவதற்கான வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...