இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்..ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..இத்தனை சிறப்பா?
ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் இலம்பாடி முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் அதன் சிறப்புகளைப் பார்க்கலாம்.
காரசாரமான ராமநாதபுரம் குண்டு மிளகாய், ருசியான வேலூர் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் அவற்றின் சிறப்புகளை பார்க்கலாம். பல நாட்களாகவே புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு புவிசார் குறியீடு அளித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பாரம்பரியமாகவும் தனித்தன்மையுடன் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தவும், கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது.
சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து, கலைஞர்களுக்கு நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதை தடுக்க முடியும். இதுபோல தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பட்டுப்புடவை பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து, கலை நயத்துடன் அழகுற கைத்தறியால் உருவாக்கப்படுவதால் மத்திய அரசு திருபுவனம் பட்டுப் புடவைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கி கொளரவித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும், 200 ஆண்டுகளாக விளைவிக்கப்படும் முண்டு மிளகாய் எனப்படும் குண்டு மிளகாய்க்கு தனிச்சிறப்பு இருக்கிறது. வறட்சியை தாங்குவதே இந்த குண்டு மிளகாயின் தனித்தன்மைகளுள் முக்கியமானது. இது கமுதி, கடலாடி, முதுகு ளத்தூா், பரமக்குடி, நயினாா் கோவில், ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது.
பொதுவாக புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து, 4 மாத காலத்திற்குள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிடும்.
அந்த வகையில் கடந்த 21ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்து நிலையில், யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல வேலூர் இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும். இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 தலைமுறைக்கும் மேலாக முள்ளு கத்தரிக்காய் சாகுபடியை செய்து வருகின்றனர்.
மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் முள் கத்திரிக்காய் வேலூர் ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டில் இருந்து சோளிங்கர், செய்யாறு, திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. அதேபோல், சென்னைக்கும் இலவம்பாடி கத்தரிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்த கத்திரிக்காய் இனத்திற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகிறது. ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் இருக்கும். இவற்றில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன.
வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யும் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேலூருக்கு உழவர் சந்தை தொடங்கி வைக்கும் போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை விவரித்தார். அதிலிருந்து கலைஞர் கருணாநிதி சுவைத்து சாப்பிட்ட இலவம்பாடி கத்தரிக்காய் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.
இந்த வகை கத்திரிக்காய் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டதாகும்.
ஏற்கனவே மதுரை மல்லி, பண்ருட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இலவம்பாடி முள் கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Comments
Post a Comment