Skip to main content

மணிப்பூர் கொடூரம்: ஜூலை 26-ல் அனைத்து தொகுதிகளிலும் மெழுவர்த்தி ஏந்தி காங். ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கொடூரம்: ஜூலை 26-ல் அனைத்து தொகுதிகளிலும் மெழுவர்த்தி ஏந்தி காங். ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக, அக்கட்சியின் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மே முதல் வாரத்தில் இருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழுகின்ற மைதேயி மக்களுக்கும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்தான் அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது.

தொடர்ச்சியான வன்முறை கலவரங்களால் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இதுவரை 120-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அவற்றில் சில தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து 300 முகாம்களில் 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினத்தை சேர்ந்த குகி மக்கள் வன்முறையாளர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மலைகளில் உள்ள வனப்பகுதியில் ஓடி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கே ஒரு உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு மணிப்பூரில் உள்ள இரட்டை என்ஜின் பாஜக அரசு முழு தோல்வி அடைந்து விட்டது.

74 நாட்களுக்கு முன்பு மே 4-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கும்பல் குகி இன மக்களை ஆயுதங்களுடன் தாக்கி கொடூரமாக வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர்.

அதில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோ தேசத்தின் மனசாட்சியை உலுக்கி விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைப் படங்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

இதற்கு மத்திய, மாநில பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

மணிப்பூர் தீப்பற்றி எரிய ஆரம்பித்து 75 நாட்கள் கழித்து நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குகிறபோது பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து முதல் முறையாக 8 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

இதில் மணிப்பூர் பற்றி 36 வினாடிகள் மட்டுமே பேசியுள்ளார். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில குற்றங்களோடு சமம் செய்து மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்ததை மூடி மறைத்திருக்கிறார். அங்கு நடந்த நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமை சம்பவங்களுக்கு சமீபத்தில் வெளியான வீடியோ ஒரு உதாரணம் மட்டுமே.

இந்த சம்பவம் இந்தியாவுக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறும்போது 'மணிப்பூர் சம்பவத்தை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றால் நாங்களே நேரடியாகத் தலையிட நேரிடும்' என எச்சரிக்கை விட்டது.

இந் நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மணிப்பூர் சம்பவத்துக்குப் பதில்கூற முடியாமல் சபை கூடுவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி உரை நிகழ்த்தியிருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சியினர் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் கூற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள் . அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார்.

மணிப்பூர் மாநில பழங்குடியின சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாகும்.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சனை களுக்குத் தீர்வு காணாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். அன்றைக்குப் பாரதப் போரில் கவுரவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் பாஜகவுக்கும் விரைவில் ஏற்படப் போகிறது.

மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது. 

மணிப்பூரில் நடந்த அவமானத்திற்குப் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்கு ஜூலை 26 -ம் தேதி நடைபெறுகிற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...