காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருக்க வேண்டும் - அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், கொளக்குடி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது.
இவ் விழாவில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்:
"திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக 75 பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 522 மாணவ-மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனா்.
2-ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளில் இயங்கி வரும் 1,616 பள்ளிகளில் பயிலும் 87 ஆயிரத்து 842 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு சுவையாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்" என்றாா்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்கத்தின் துணை தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி: ஆரணி நகரம் அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகரமன்ற தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.
இதில், ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, வட்டாட்சியா் மஞ்சுளா, நகராட்சி ஆணையாளா் குமரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி பள்ளி மாணவா்களுக்கு காலை உணவை வழங்கினா்.
இதேபோல, ஆரணி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஒன்றிய குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தாா்.
உடன் ஒன்றிய திமுக செயலாளா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், எம்.மோகன், துரை மாமது, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment