"பாஜக ஆட்சியை பிடிக்க எதையும் செய்யும்" மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது பேசிய அவர்,
"கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். கட்சியினர் இப்போதே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது, நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது, அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சொந்தம் அல்ல.
ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும்! ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது இடங்களில் கவனமுடன் பேச வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்,
"கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவினை வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், கொள்கைத் திருவிழாவாக கொண்டாடுவோம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம். பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு ‘வாழ்வா சாவா’ என்ற தேர்தல், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள்;
தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து வருவதால் நம்மை நோக்கிப் பாய்வார்கள்; கடந்த காலங்களில் இதுபோன்ற பல தடைகளை சமாளித்து நாம் வெற்றி பெற்றது போல், இம்முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்" என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment