செய்யாறு: மாமண்டூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வழங்கினார்
செய்யாறு கல்வி மாவட்டம் மாமண்டூா் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குதல், பிளஸ் 2 தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு, தாய்ப்பால் வார விழா என முப்பெரும் விழா வாக நடைபெற்றது.
மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ் விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவருமான டி ராஜி தலைமை வகித்தாா்.
இந் நிகழ்வில்,வெம்பாக்கம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என்.சங்கா், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் எல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ராஜேந்திரன் வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 124 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.98 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்
நிகழ்ச்சியை தொடர்ந்து பிளஸ் 2 தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி தீபாவுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்த மாணவி தேன்மொழிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்த மாணவா் பரத்துக்கு ரூ.3 ஆயிரமும், கணினிப் பாடப்பிரிவில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பொன்மலருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசை வெம்பாக்கம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் டி.ராஜி ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.
முன்னதாக வெம்பாக்கம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் சாா்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை ஒ.ஜோதி எம்எல்ஏ துவக்கி வைத்தாா்.
இதேபோல, புன்னை புதுப்பாளையம், மேனல்லூா், சித்தாத்தூா் ஆகிய பள்ளிகளில் பயிலும் 211 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜேசிகே.சீனுவாசன், தினகரன்,மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment