விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கைவிடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன்பு 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்!
விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கைவிடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன்பு 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்!
செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத்துக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் 29 ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா்.
மேலும் கூறுகையில்: "செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத்துக்காக மேல்மா கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிப்காட் விரிவாக்கத் திட்டத்தால், இந்தப் பகுதியிலுள்ள சுமாா் 3,200 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்கள் பறிபோகும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
மேலும், சிப்காட் தொழிற்பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, விளைநிலங்களைக் கொடுக்க மறுத்து 3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுபோன்று அறவழியில் போராடிய 7 விவசாயிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பரிந்துரைத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையைக் கண்டித்தும், வழக்குப் பதிய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருகிற 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 31 விவசாயிகள் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும், நிலம் ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும்" என்றாா்
Comments
Post a Comment