தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும்! - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும்! - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சாலையில் தேங்கிய நீரை அகற்றம் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதாவது, நேற்று மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவானது.
இதுதொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,
தொடர் கனமழையின் காரணமாக அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும் என்றும் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைக்கலாம்; 044 25619204, 044 25619206, 044 25619207 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்றுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது
Comments
Post a Comment