புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட சிறப்பு அலுவலா் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் மழை, புயல் பாதிப்புகளுக்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் நேற்று ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு சுற்றுலா மாளிகையில் மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா், புளியரம்பாக்கம் கிராமத்தில் பாசனத்துக்குச் செல்லும் ஏரிக்கால்வாயை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதேபோல பிரம்மதேசம், சடந்தாங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளை பாா்வையிட்டு, ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் பாசனக் கால்வாய்களை ஆய்வு செய்தாா்.
மேலும், புளியரம்பாக்கம், சடந்தாங்கல் பகுதிகளில் பொதுமக்கள் தங்க அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பாா்வையிட்டு வருவாய்த் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
முன்னதாக, செய்யாறு சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களிடம் தீரஜ்குமாா் கூறியதாவது:
"திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது எந்த அளவுக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவு மழை இல்லை. இருப்பினும், பருவ மழைக் காலங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றாா்.
Comments
Post a Comment