கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ. 1000 ஜனவரி முதல் கூடுதல் பெண்களுக்கு!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக வரும் ஜனவரியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்,
குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
மகளிர் உரிமை திட்டம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
மிகப்பெரிய திட்டம்: தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த 10.11.2023 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படியே இவர்களுக்கும் சேர்த்து பணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த திட்டம் தொடர்பான இன்னொரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி மாதம் இதற்கான புதிய விண்ணப்பங்கள் அளிக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.
இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதேபோல் ஜனவரி முதல் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும் சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான 15ம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
Comments
Post a Comment