"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி திமுகவுக்கு இறங்கு முகம்"- இபிஎஸ்
"அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது.மக்களவைத் தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் பலர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்" என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில்,
"அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமுகவின் சேலம் மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும்போதே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல் கத்துக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.
அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒழிக்கவோ, முடக்கவோ, ஒடுக்கவோ முடியாது. சோதனை மேல் சோதனைகளை சந்தித்த கட்சி. எத்தனை வழக்குகள், எத்தனை சிக்கல்கள். அதிமுகவை முடக்க எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அத்தனையும் வென்று காட்டினோம். ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடைபெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பதற்றத்தோடு பொதுக்குழுவில் நாம் சந்திப்போம். ஆனால் இந்த பொதுக்குழுவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. நீதிமன்றத்திலும் நீதி வென்றுவிட்டது. தேர்தல் ஆணையத்திலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.
தமிழகத்திலேயே அதிக தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. அதிமுக அரசின் நடவடிக்கைகளால் தான் தமிழகம் இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. கொரோனா காலத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றியது. ஆனால், சரியான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறிய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் பல உயிர்களை இழந்தோம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது 520 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. செயலாற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. பொம்மை முதலமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆளுகிறார். அதனால் மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். இந்த ஆட்சியின் சாதனை என்றால் ஊழல் செய்வதில் சாதனை படைத்துள்ளதை தவிர வேறு எதுவும் கிடையாது. அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை கிடைக்க காத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் முன்னணி வரிசையில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் பலரும் மக்களை பார்க்காமல், நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்கள்" இவ்வாறு பேசினார்
Comments
Post a Comment