தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை!
தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்தன.
தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், குற்ற நடவடிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனா். சமீபத்தில் இதற்கான மதிப்பீடு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் 'ஏ பிளஸ்' பட்டியலில் 421 போ், 'ஏ' பட்டியலில் 836 போ், 'பி' பட்டியலில் 6,398 போ், 'சி' பட்டியலில் 18,807 போ் என 26,462 ரௌடிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது 'ஏபிளஸ்' மற்றும் 'ஏ' பட்டியல் ரௌடிகளின் எண்ணிக்கை சுமாா் 50 சதவீதம் குறைந்துள்ளது.
இதுபோன்ற தொடா் குற்றச்செயலில் ஈடுபடும் ரௌடிகளை கட்டுப்படுத்த காவல் நிலைய அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகம் முழுவதும் அதிக குற்றச்செயலில் ஈடுபடும் 550 ரௌடிகள் கண்டறியப்பட்டு அவா்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இதில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கொலை வழக்கில் தொடா்புடைய 119 ரௌடிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.
இதே போல சிறையில் உள்ள ரௌடிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ரௌடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த டிஎஸ்பி தலைமையிலான ரௌடி கண்காணிப்பு குழு மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ரௌடிகளின் செயல்பாடு, அவா்களின் நடவடிக்கை, சட்டவிரோத செயல்பாடு, அவா்களின் பொருளாதார பணப்பரிமாற்றம், அரசியல் தொடா்பு, சட்ட வழக்குகளின் நிலைமை, நீதிமன்ற விசாரணை உள்ளிட்ட 10 இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது.
மேலும், இக்குழு ரௌடிகள் மீது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக கடந்த 6 மாதத்தில் 61 ரௌடிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, விதிகளை மீறிய 19 ரௌடிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்குகளில் போலி குற்றவாளிகள் சரணடைவதைத் தடுக்க சட்டரீதியாக காவல்துறை வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ரௌடிகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் எதிரொலியாக நிகழாண்டு ஜூன் வரை 2,285 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
2019-ஆம் ஆண்டு 1,678 கொலைகளும், 2023-இல் 1,599 கொலைகளும் நிகழ்ந்த நிலையில் நிகழாண்டு ஜூன் வரை 792 கொலைகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment