தெலுங்கானா பட்ஜெட் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அதிக நிதி
எஸ்சி, எஸ்டி துறைக்கு நிதி குறைப்பு
காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா அரசு, நடப்பாண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நலனுக்காக ரூ.3,003 கோடியை ஒதுக்கியிருக்கிறது.
இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 36 சதவிகிதம் அதிகமாகும். அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி சமூக வளர்ச்சிக்கான நிதியை குறைத்திருக்கிறது.
நேற்று தெலுங்கான மாநில சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பாட்டி விக்ரமார்கா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்த பட்ஜெட் தொகையாக ரூ.2.91 லட்சம் கோடி என்று அறிவித்த அவர்,
"சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்"
என்று கூறியிருந்தார்.
இந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ரூ.3,003 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ரூ.2,195 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 36% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசிய விக்ரமார்கா,
"பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் பயிற்சி வசதிகளைப் போலவே சிறுபான்மை மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். தொழிற் பயிற்சி பெறும் மாணவர்கள் உள்ளூர் மாணவராக இருந்தால் அவருக்கு ரூ.2500 வழங்கப்படும். இதே அம்மாணவர் வெளியூரை சேர்ந்தவராக இருந்தால்
ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டு ஜனவரியில் தப்லிக் ஜமாத், இஜ்திமா வுக்கு தெலுங்கானா அரசாங்கம் ரூ.2.4 கோடியை வழங்கியுள்ளது.
அதேபோல, ஹஜ் யாத்ரீகர்களுக்கு ரூ.4.43 கோடியை விடுவித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 14 சதவிகிதமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே கூடுதல் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சிறுபான்மையினர் தவிர, பெண்கள் முன்னேற்றத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு ரூ.2,736 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த துறைக்கு ரூ.2,131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளின் கல்வியை பொறுத்தவரை, அங்கன்வாடி பள்ளிகள் சிறப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அம்மா ஆதார் பாடசாலை குழுக்களை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.6,229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இந்த துறைக்கு ரூ.9,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பட்டியல் சமூகத்தினர் மேம்பாட்டு துறைக்கு ரூ.21,072 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ.7,638 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.13,434 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.3,969 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ரூ.4,365 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
சிறுபான்மையினர் நலனுக்காக நிதி கூடுதலாக ஒதுக்கியது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால், அதற்காக பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்ட வேண்டுமா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Comments
Post a Comment