டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை கண்டதும் சுட உத்தரவு!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் தரப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளன.
இந்தப் போராட்டங்களில் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கைத் தாண்டி வெளியே வருவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் சுமார் 30 இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன.
வங்கதேசத்தில் தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு இந்த போராட்டம் மிகப் பெரிய ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. ஹசீனா வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் செல்லவிருந்தார். இருப்பினும், போராட்டம் தொடர்ந்த நிலையில், தனது திட்டங்களை ரத்து செய்துவிட்டார்.
அங்கே பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர் மேலும், ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
கண்டதும் சுட உத்தரவு: மக்கள் அத்தியாவசியப் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஊரடங்குச் சட்டம் சில மணி நேரம் மட்டும் நீக்கப்பட்டது. இருப்பினும், சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அனைத்து கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வெளியே வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை முதலே அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்க தேசத்தில் வன்முறை போராட்டங்கள் தொடரும் நிலையில், சுமார் 1,000 இந்திய மாணவர்கள் வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவர்கள் நேபாளம், பூடான் வழியாக இந்தியா திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல வங்கதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவும் தனது நாட்டுக் குடிமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
1971இல் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு அரசு வேலைகளில் பொதுப் பிரிவினருக்கு 44 சதவீதம் வழங்கப்படும் நிலையில், மீதமுள்ள 56 சதவீதம் பல்வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது.
போராட்டம் ஏன்: குறிப்பாகச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு 10 சதவீதம், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
இதில் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் போராட்டக்காரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் இட ஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment