வயநாடு 2-வது பயங்கர நிலச்சரிவு: மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியா? கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது இது, இன்று பிற்பகல் 3.30 மணி நிலவரம். இதுவரை 225 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பெரும் பாதிப்புக்கு உள்ளான முண்டக்கை பகுதி குறித்த பார்வை இது. கிட்டத்தட்ட 150 பலிகளோடு வயநாட்டின் முண்டக்கை மீண்டுமொரு சோக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. வயநாட்டை பற்றி அறிந்தவர்களுக்கு முண்டக்கை பகுதியை பற்றியும் தெரிந்திருக்கும். அதன் அழகுக்காக அறிந்தவர்கள் மத்தியில் முண்டக்கையின் இருண்ட பக்கத்தை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிடர்களுக்கு பிடித்த நகரம்தான் இந்த முண்டக்கை என்று கவலையுடன் சொல்வது உண்டு. கடந்த நான்கு தசாப்தங்களில், அதாவது 40 ஆண்டுகளில் இரண்டு மிகப் பெரிய நிலச்சரிவுகளை சந்தித்திருப்பதே இத்தகைய பெயரைப் பிடிக்க காரணம். ஜூலை 1, 1984 அன்றும் இதேபோல் அதி கனமழையை பதிவு செய்த முண்டக்கை, அதனால் 14 உயிர்களைப் பறித்த பெரிய நிலச்சரிவை கண்டத...